அன்னை மரியாள்

மரியன்னையை நோக்கிய செபங்கள்

மங்கள வார்த்தை செபம்
அருள் நிறைந்த மரியே வாழ்க!
கர்த்தர் உம்முடனே.
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே.
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சியசிஷ்ட மரியாயே,
சர்வேசுவரனுடைய மாதாவே,
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும்
வேண்டிக்கொள்ளும். - ஆமென்.
மங்கள வார்த்தை செபம்
(புதிய வடிவம்)
அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க!
ஆண்டவர் உம்முடனே.
பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே.
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசி பெற்றவரே.
தூய மரியே,
இறைவனின் தாயே,
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும்
வேண்டிக்கொள்ளும். - ஆமென்.


புனித  பெர்னார்டின் செபம்
மிகவும் இரக்கமுள்ள தாயே!
உமது அடைக்கலமாக ஓடிவந்து,
உம்முடைய உபகார சகாயங்களை
இறைஞ்சி மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும்
உம்மால் கைவிடப்பட்டதாக 
ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை
என்று நினைத்தருளும்.
கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே!
தயையுள்ள தாயே! 
இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு
உமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம்.
பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள்
உமது தயாபரத்தில் காத்து நிற்கின்றோம்.
அவதரித்த வார்த்தையின் தாயே
எங்கள் மன்றாட்டைப் புறக்கனியாமல்
தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே
ஆமென்.
ஜென்பப்பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியாயே, பாவிகளுக்கு அடைக்கலமே, இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். - அருள்நிறைந்த (மூன்று முறை)
பரலோகத்துக்கு இராக்கினியே வாழ்க!
பரலோகத்துக்கு இராக்கினியே வாழ்க! :சம்மனசுக்களுக்கு தலைவியே வாழ்க! உலகத்தைப்பிராகாசிக்கச் செய்யவந்த பரஞ்சோதியாகிய கர்த்தர் எழுந்தருளின திருவாசலே வாழ்க! தேவ கனியைத் தந்த தூய்மையான திவ்விய பூங்கொடியே வாழ்க! சகல கன்னியர்களிலும் மகிமை பொருந்திய அதிசவுந்தரிய ரூபலாவண்ய கன்னிகையே களிகூறும். ஆராதனைக்குப் பாத்திரமான உம்முடைய திருக்குமாரனிடத்தில் எங்கள் பாவப்பொறுத்தலுக்காக மன்றாடும்.
முதல் - அர்ச். கன்னிகையே, நான் உம்மை ஸ்துதிக்கக் கிருபை செய்தருளும்.
துணை - உம்முடைய சத்துருக்களை வெற்றி கொள்ள எனக்கு பாலத்தைத் தந்தருளும்.
மன்றாடுவோமாக: தயாபர சர்வேசுரா சுவாமீ! எங்கள் துர்ப்பலத்துக்கு உமது திருச்சரணக் காவலைக் கட்டளையிட்டருளும், தேவமாதாவை நினைத்துக் கொண்டாடுகிற நாங்கள் அந்தத் திவ்விய தாயருடைய வேண்டுதல் உதவியால் பாவமாகிய மரணத்திலிருந்து உயிர்க்கும்படிக்கு அநுக்கிரகம் செய்தருளும். இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் ஆண்டவரான சேசுகிறிஸ்து நாதருடைய திரு முகத்தைப்பார்த்து எங்களுக்குத் தந்தருளும். - ஆமென்.

பொதுவான மூவேளை செபம்
ஆண்டவருடைய தூதர் மரியாவுக்குத் தூதுரைத்தார்.
மரியா தூய ஆவியாரால் கருவுற்றார். (1 மங்கள வார்த்தை செபம்)
இதோ ஆண்டவரின் அடிமை.
உமது சொற்படியே எனக்கு நிகழட்டும். (1 மங்கள வார்த்தை செபம்)
வாக்கு மனிதர் ஆனார்.
நம்மிடையே குடிகொண்டார். (1 மங்கள வார்த்தை செபம்)
கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி /
இறைவனின் தூய அன்னையே / எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மன்றாடுவோமாக: இறைவா! / உம் திருமகன் மனிதர் ஆனதை / உம்முடைய வானதூதர் வழியாக / நாங்கள் அறிந்திருக்கிறோம். / அவருடைய பாடுகளினாலும் இறப்பினாலும் / நாங்கள் உயிர்ப்பின் மாட்சி பெற / உமது அருளைப் பொழிவீராக./ எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக / உம்மை மன்றாடுகிறோம்./ ஆமென்.
பாஸ்கா கால மூவேளை செபம்
விண்ணக அரசியே! மனம் களிகூரும். அல்லேலூயா.
ஏனெனில் இறைவனைக் கருத்தாங்கும் பேறு பெற்றீர். அல்லேலூயா.
தாம் சொன்னபடியே அவர் உயிர்த்தெழுந்தார். அல்லேலூயா.
எங்களுக்காக இறைவனை மன்றாடும். அல்லேலூயா.
கன்னி மரியே! அகமகிழ்ந்து பூரிப்பு அடைவீர். அல்லேலூயா.
ஏனெனில் ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார். அல்லேலூயா.
மன்றாடுவோமாக: இறைவா / உம்முடைய திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால் / உலகம் மகிழத் திருவுளம் கொண்டீரே! / அவருடைய அன்னையாகிய கன்னி மரியாவின் பரிந்துரையால் / நாங்கள் நிலை வாழ்வின் பெரு மகிழ்வில் பங்கு பெற / அருள் புரியும். / எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக / உம்மை மன்றாடுகிறோம். / ஆமென்.
மரியாவின் பாடல்
ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகைக் கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்;
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்;
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்;
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.
மூதாதையருக்கு உரைத்தபடியே அவர்
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.

கிருபை தயாபத்து செபம்
கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப ரசமுள்ள கன்னிமரியாயே!
- இயேசு கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக
- சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். -ஆமென்.
ஜெபிப்போமாக சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற இறைவா! முத்திபேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும் சரீரம் தூய ஆவியின் அனுக்கரகத்தினாலே தேவரீருடைய திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கெனவே நியமித்தருளினீரே. அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் அவளுடைய இரக்கமுள்ள மன்றாடினாலே இவ்வுலகில் சகலப் பொல்லாப்புக்களிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்.

No comments:

Post a Comment